இந்திய சினிமாவின் தரமான படைப்புக்களில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மிகவும் தத்ரூபமான முறையில் எடுக்கப்பட்டதொரு ஆங்கிலத் திரைப்படம்தான் Mr. and Mrs. Iyer . உண்மையில் என்னை வெகுவாகப் பாதித்த திரைப்படங்களில் இதற்கு முதன்மையிடத்தை வழங்கலாம் என நினைக்கிறேன், அந்தளவுக்கு இத்திரைப்படம் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 2002 ம் ஆண்டு அபர்ணா செண்னின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பல தேசிய விருதுகளை தன்வசமாக்கிய பெருமைக்குரியது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
நிச்சயமாக தரமான மற்றும் தனித்துவமான படைப்புக்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது புதிதல்ல. திரைப்படம் ஆரம்பிக்கும் போது பிராமணத் தமிழின் வாடை கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றது. மீனாக்சி ஐயராக வரும் கொன்கொனா சென் சர்மா, வட் ஏ ஓசம் எக்ரிங் !! என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிரமாதமாக நடித்திருக்கார்” மண்ணிக்கவும் வாழ்ந்திருக்கிறார். இயல்பான நடிப்பு, தமிழ் கலாசாரத்திற்கேற்ற உடையமைப்பு, மற்றும் மிதமான அழகு போன்றவற்றால் திரைப்படத்துடன் எம்மை பின்னிவிடுகிறார் என்றுதான் கூற வேண்டும்.
"ஜெஹாங்கிர் ராஐா சவுத்ரி"ஆக ராகுல் போஸ் தன்னுடைய இயல்பான நடிப்பு பானியை கச்சிதமான முறையில் செய்திருப்பது திரைப்படத்தின் வெற்றிக்கானதொரு முக்கிய காரணியாக அமையப் பெற்றிருந்தது. ஒரு ஆண் தனியாகவிருக்கும் குடும்பப்பாங்கான பெண்னொருவருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பு முறைக்கமைவாக ராகுலை நடிக்க வைத்திருக்கும் விதம் இயக்குனரின் வேறுபட்ட அல்லது அனுபவரீதியான சிந்தனையின் வெளிப்பாடாகக்கூட இருந்திருக்கலாம்.
எவ்வாறு ஒரு இயல்பான காதல் ஊற்றெடுக்கின்றது என்பதை ஒரு தரமான திரைப்படத்தின் வாயிலாக மிகவும் அருமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமல்லாது,
ஒரு கட்டுக்கோப்பான மற்றும் குடும்பப்பாங்கான பெண்ணின் உணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தையும் தெளிவாகக் காட்சிப்படுத்தி திரைப்படத்தை பல தேசிய விருதுகளை அள்ள வைத்த பெருமை இயக்குனரேயே சாரும்.
உண்மையில், அபர்ணா செண் வேறுபட்டதொரு கோணத்தில் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இனக்கலவரத்துடன் கூடியதொரு பாதுகாப்பான மற்றும் நிதானமான காதலை சற்றும் தொய்வில்லாமல் மிகவும் பிரமாதமாக செதுக்கியிருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய மகளுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையையும் பெற்றுக்கொடுத்ததொரு திருப்தியானது நிச்சயமாக அபர்ணா செண்னுக்கு கிடைத்திருக்குமென்பதில் எனக்கு (துளியும்) எந்தவிதமானதொரு ஐயமுமில்லை.
மீனாக்சியின் ஒவ்வொரு வார்த்தையும் மற்றும் உணர்ச்சியும் என்னைப் போன்ற ரசிகர்களின் மனதை நிச்சயமான பாதித்திருக்கும் என்பது உறுதியே."சந்தானம், சந்தானம்" எனும் மொழி உண்மையில் கேட்பதற்க்கு இனிமையாகத்தான் இருக்கின்றது. உண்மையான அன்பு, அக்கறை மற்றும் காமமில்லாத காதல் போன்றவற்றால் நிரப்பப்பட்டதொரு தரமான இந்தியப் படைப்புத்தான் இத்திரைப்படம் என்று கூடக் கூறிக்கொள்ளலாம்.
வாங்க தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் வேறுபட்டதொரு எழுத்துப்பானியில்.