Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

ஆடாம ஜெயிச்சோமடா

“எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
இவரும் ஒருவர்.

இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














பேஸ்புக்கின் ஆதிக்கம் ! வரமா?? சாபமா???

 மிகவும் பிரபலமான சமுகவலைத்தளங்களில் ஒன்றுதான் பேஸ்புக்(Facebook).
2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க் சகர்பேர்க்(Mark Zuckerberg) என்பவராலும் சக நண்பர்களாலுமே இது உருவாக்கப்பட்டது.பல்கலைக்கழக நண்பர்கள் மத்தியில் கல்விசார் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் நோக்கத்திற்காகவே பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதேயன்றி வியாபார நோக்கத்திற்காகவல்லதென்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.காலப்போக்கிலே இது  விரிவுபடுத்தப்பட்டு தற்போது அதாவது இன்றைய நிலையில் பல பில்லியன் டொலர்களை இலாபமீட்டக்கூடியதொரு நிறுவனமாக வேறூன்றியிருப்பதென்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். 



நட்புவட்டத்தை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தியே பேஸ்புக்கானது தன்னை மக்களின்பால் ஈர்த்துள்ளது.நிச்சயமாக இதனால் ஏராளமான சாதமான விளைவுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்க்கு நிகரான விகிதத்தில் பாதகமான விளைவுகளுக்கும் குறைவில்லையென்றுதான் கூற வேண்டும்.இது நியுட்டனின் 3ம் விதிக்கமைய பொருத்தமானதொன்றாகவே அமையப் பெற்றுள்ளது.அதாவது ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கமுண்டு என்பதாகும்.(Every action has an equal and opposite reaction)


13 வயதிற்க்கு மேற்பட்ட எவரொருவரும் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம் என்பது பேஸ்புக் நிறுவனம் வகுத்துள்ள ஆரம்பக்கட்ட விதிமுறையாகும்.இதன் விளைவாகவே இன்று பாடசாலை மாணவா்கள் முதல் வயதானவர்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் அனைவரிடத்திலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக்கெனும் சமுகவலைத்தளம்(Social site).

குறிப்பாக அண்மைய ஆய்வறிக்கையிக் பிரகாரம் (மார்ச் 2013) பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.11 பில்லியன் என்பதுதான் ஆச்சரியமானதொரு விடயமாகும்.அதாவது நாளொன்றுக்கு 665 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 7 மாதத்திற்கு முன்னர் 1.06 பில்லியன் பாவனையாளர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது கடந்த வருடத்தை விட 27% ஆன வளர்ச்சி கண்டுள்ளது.அந்தளவுக்கு இதன் பாவனையாள்களின் எண்ணிக்கை ஆர்முடுகளில் பயணிக்கின்றது.


நாளொன்றுக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 26% ஆன வளர்ச்சி கண்டு ஆய்வாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.
மேலும் நவீன கைப்பேசிகளின் வருகையினாலும்(Smart Phones) இதனது பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருக்கின்றது.சுமார் 750 மில்லயன் மக்கள் தங்களது கைப்பேசிகளின் ஊடாவே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


வருடாந்த பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை :Source facebook Inc

1 மில்லியன்  - 2004 இறுதி
5.5  மில்லியன் -2005 இறுதி
12  மில்லியன்  -2006 இறுதி
20  மில்லியன் - ஏப்ரல் 2007 
50  மில்லியன் - ஒக்டோபர்  2007
100  மில்லியன்  - ஆகஸ்ட் 2008
150  மில்லியன் - ஜனவரி 2009
750  மில்லியன் -ஜுலை 2011
800  மில்லியன் -செப்டம்பர் 2011
845  மில்லியன்-2011 இறுதி
901  மில்லியன் -மார்ச் 2012
955  மில்லியன் -ஜுன் 2012
1.01 பில்லியன் -செப்டம்பர் 2012
1.06 பில்லியன் -டிசம்பர் 2012
1.11 பில்லியன் -மார்ச் 2013


தற்போது சந்தையில் பலகையான ஸ்மாட் கைப்பேசிகளில்(Smart Phones) பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) நிறுவப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விளைவாக பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் வியாபார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
அன்ரொயிட் கைப்பேசிகள்(Android phones), வின்டோஸ் கைப்பேசிகள்(Windows phones) , ஜாவா கைப்பேசிகள்(Java phones) போன்றன தற்போது சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற கைப்பேசிகளாகும்.
மேலும் இவற்றில் சமுக வலைத்தளங்களுக்கென்று தனியானதொரு இடமொதுக்கப்பட்டுள்ளது.அதாவது பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) என்ற பெயரில், இதன்மூலமே இலகுவாக பேஸ்புக்கின் பாவனைனையை மேற்கொள்ள முடியுமாகவுள்ளது.


பேஸ்புக்(Facebook), டுவிட்டர(Twitter), கூகில் பிளஸ்(Google Plus), லிங்ட் இன்(Linked in) போன்றன மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளங்களாகும்.இதிலும் குறிப்பாக பேஸ்புக்கானது தனது ஆதிக்கத்தை முதன்மைப் படுத்தியிருக்கின்றது என்பதே விசேட அம்சமாகும்.
பேஸ்புக்கானது வருடமொன்றுக்கு பல பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டிக்கொண்டிருக்கின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.எவ்வாறு பேஸ்புக்கானது இலாபமீட்டுகின்றது என்பது பற்றியதொரு ஐயப்பாடொன்றும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
CTR (((((((((Click Through Rate) என்ற முறையின் அடிப்படையிலே பேஸ்புக்கானது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுகின்றது.குறிப்பாக இது விளம்பரங்கள் மூலமே சாத்தியமாக்கப்படுகின்றது.உண்மையில் விளம்பரங்கள் இல்லாவிட்டால் பேஸ்புக்கின் கதி பரிதாபத்திற்குள்ளானதொன்றாக மாறிவிடும்.


பாவனையாளருக்கு பல்வேறு வசதிகளை புதுப் புது வடிவில் அறிமுகப்படுத்தி தொடர்ந்தும் தன்னோடு இணைத்து வைத்து கொண்டிருப்பதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான் என்றால் அதற்கான மாற்றுக் கருத்துக்கள் குறைவாகத்தான் இருக்கும்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவே (facebook page) தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.உண்மையில் இது பெருமளவில் மக்கள் மத்தியில் சென்றடைவதே சிறப்பியல்பாகும்.பிரபலமான நிறுவனங்கள் முதல் சிறியளவிளான நிறுவனங்கள் வரை அனைவருமே தங்களுக்கென்று பேஸ்புக் பக்கத்தினை உருவாக்கி அதனை வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும் பிரபலமடையச் செய்கின்றன.மேலும் இணையத்தள வியாபாரத்திற்க்கு (E-Business/Online Business) பேஸ்புக்கானது ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை எவரொறுவராலும் மறுக்க முடியாது.


பேஸ்புக்கானது பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டினைந்து தனது பங்குகளை முதலீடு செய்வதன் மூலமாகவும்  பெருமளவான இலாபத்தை ஈட்டிக் கொள்கின்றது.
பேஸ்புக்கின் வருகை இணையத்தின் மற்றுமொரு புரட்சியென்றே இணையத்தள ஆய்வாளர்களினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.அந்தளவுக்கு அதன் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது.உண்மையில் இது மக்களுக்க வரமா? சாபமா? என்றதொரு வினாவும் எழுப்பப்படுகின்றது.
ஒரு நாணயத்திற்க்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல பேஸ்புக்குக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன அதாவது சாதகமான பக்கம் மற்றும் பாதகமான பக்கம் போன்றவையாகவே அவை அடையாளப்படுத்தப்படுகின்றன.
நேரவிரயம், கல்விச் சீர் குலைவுகள், ஆபாச நடவடிக்கைகள், இணையத்தள மோசடிகள், போலி நட்பு வட்ட மோசடிகள் என்றே இதனது பாதகமான பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றன. இதனை பேஸ்புக்கினால் மறுக்கவும் முடியாது , எந்தவொரு மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது என்பதே நாம் யாவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக்கானது பல்வேறு சாதகமான விளைவுகளுக்கே தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தே சாதக, பாதக விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்ற கருத்தையும் மறுக்க முடியாது.இதன் அடிப்படையில் உண்மையில் இது மக்களுக்கு கிடைத்ததொரு வரமாகத்தான் என்னால் உற்று நோக்கப்படுகின்றது.




Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...