எதையாவதைப் பற்றி எழுதலாம் எனும் சிந்தனையின் போதுதான் இன்றைய தினம் ஞாபகத்திற்கு
வந்தது “உலக தாய்மொழித் தினம்”. எத்தனை மொழிகளில் உரையாடினாலும் அவரவர் தாய்மொழியில் உரையாடுகின்ற போது கிடைக்கின்ற சௌகரியம்,தைரியம்,தெளிவுத்தன்மை,நிதானம், பூரண மகிழ்ச்சி
ஆகியவற்றை அளவிட முடியாது அனுபவிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ளலாம் என்பது என்னுடைய
தனிப்பட்ட கருத்தாகும்.
என்னுடைய தாய்மொழி “தமிழ்” என்று எத்தனை பேர் மார் தட்டிக் கொள்கிறார்கள்
என்பது என்னிடத்திலே பெரியதொரு ஐயப் பாட்டை தோற்றுவித்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு
அதன் வளர்ச்சிப் போக்கு துரித கதியில் பயணித்துக் கொண்டு செல்வதே தெளிவான எடுத்துக்காட்டாகும்.
ஏராளமான நண்பா்கள் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் மாத்திரம்
தான் அங்கிகரிக்கப் படுவோம் என்றதொரு தவறான சிந்தனைப் போக்கை கண்மூடித்தனமாக பின்பற்றி
வருவது தாய்மொழியாம் தமிழுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே என் மனதில் தோன்றுகின்றது.
என்னைப் பொறுத்த மட்டில் மொழியென்பது ஒரு ஊடகமாகத்தான் உற்று
நோக்கப்படுகின்றது.அதாவது ஒரு தொடர்பாடல் ஊடகம் என்றே குறிப்பிடலாம்.
தாய்மொழியை இழிவாக நினைப்பது தாயை இழிவாக நினைப்பதற்கு ஈடாகும்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுவது தாயும் , தாய்மொழியும்
தான் என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது..
கட்டாயம் எப்போதும் தாய்மொழியில் தான் பேச வேண்டுமா ?? என்றதொரு
வினாவை எம்மில் பலர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். உண்மையில் உங்களது சிந்தனைப்
போக்கு தவறானதாகத்தான் என் மனதில் தோன்றுகின்றது காரணம் என்னவெனில் காலத்தின் தேவைக்கேற்ப
தங்களைத் தாங்கள் மாற்றிக் கொள்வதுததான் சிறந்தது என்ற கருத்தின் அடிப்படையில்.
“தழிழ் அவமானமல்ல அதுவொரு அடையாளம் என ஒரு பகுதியினரும் ச்ச்சீ தமிழா??”
என இன்னுமொரு பகுதியினரும் ஒரு மொழிக்கிடையிலேயே பிரிவினவாதத்தை உண்டாக்கும் செயலானது
மிகவும் வருந்நத்தக்க தொன்றாகும்.
காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கில அறிவு இன்றியமையாததொன்றாகி விட்டதை
எவரொருவராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்ப புரட்சியின் கால கட்டத்தில் தான் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதில் ஆங்கிலம் தான் முதல் மொழி மட்டுமல்ல உலக மொழியும்
கூட என்ற அடிப்படையில் இதன் பயன்பாட்டை இழிவாக்கவோ நிறுத்தவோ முடியாததென்பது உலகறிந்த
உண்மையாகும்.
வெளிநாட்டவருடனோ அல்லது தமிழ் மொழி நன்கு பரிச்சயம் இல்லாத ஒருவருடனோ
ஆங்கிலத்திலோ அல்லது குறிப்பிட்ட வேறு மொழியிலோ உரையாடுவதில் தவறில்லை ஆனால் தமிழ்
நன்கு பரிச்சயமானவர்கள் ஆங்கிலதில் உரையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் எனது
கருத்து. இது தாய் மொழிக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைந்து விடுகின்றது என்பது
எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.
கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஏராளமான எடுத்துக்காட்டுக்களுடன்
ஆனால் அதை வாசிப்போருக்கு பொறுமை இருக்குமா?? என்பதுதான் என்னிடத்திலே எழும் பெரிய ஐயப்பாடு.
அதன் நிமித்தம் இப்பதிவை மிகவும் சுருக்கமாகவே கிறுக்கியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
-தொடர்ந்து கதைப்போம் இது போலவும் ஏராளமாக-